செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் செங்கை புத்தக திருவிழா 2-வது நாளான நேற்று அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் கிள்ளிவளவன் தலைமையில் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் செங்கை புத்தக திருவிழாவானது கடந்த 28ம் தேதி முதல் வரும் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. காசி அலிசன் மேல்நிலைப் பள்ளியில் 2-வது நாளாக நேற்று 80க்கும் மேற்பட்ட அரங்குகளில் 1,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டன. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.100 கூப்பன் இலவசமாக வழங்கப்படுகிறது.
இப்புத்தக திருவிழாவில் திருப்பூர் கிருஷ்ணன் கருத்துரையும், கலக்கப்போவது யாரு மற்றும் சூப்பர் சிங்கர் குழுவினரின் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாகிதா பர்வீன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் .ராஜஸ்ரீ, பதிப்பாளர் பொன்.வாசுதேவன், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.