கராச்சி: பாகிஸ்தானை ஆளும் ‘காபந்து அரசு’ சட்ட விரோத ஈரான் பெட்ரோல் விற்ற சுமார் 500 பெட்ரோல் பங்குகளை மூடி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. பாகிஸ்தானில் அரசியல், பொருளாதார நிலை பலவீனமாக உள்ளது. விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண பெட்ரோல் பங்குகளில் சட்டவிரோதமாக ஈரான் பெட்ரோல், டீசல் விற்பதாக காபந்து அரசுக்கு தெரிய வந்தது. அதனையடுத்து அங்கு சட்டவிரோத ஈரான் பெட்ரோல், டீசல் விற்ற சுமார் 500 பங்குகளை மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாகிஸ்தானில் இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் அந்நாட்டு மதிப்பில் ரூ. 330 ஆகும். ஆனால், ஈரான் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 220 முதல் 230 வரை விற்கப்படுகிறது. பலுசிஸ்தான் மாகாணம் ஈரானுக்கு அருகில் உள்ளதால் அங்கு கடத்தி வரப்படும் ஈரான் பெட்ரோல், டீசல் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. அங்கிருந்து கராச்சி மற்றும் இதர பகுதிகளுக்கும் பெட்ரோல், டீசல் சட்டவிரோதமாக கொண்டு சென்று விற்கப்படுகிறது. அதையறிந்து நாடு முழுவதும் அதிரடி சோதனையை பாகிஸ்தான் காபந்து அரசு நடத்தி வருகிறது.