Saturday, May 18, 2024
Home » சதுர்த்தி விழாவிற்கு 7 நாட்களே உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்: ரூ.150 முதல் ரூ.50 ஆயிரம் வரை விலை நிர்ணயம்

சதுர்த்தி விழாவிற்கு 7 நாட்களே உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்: ரூ.150 முதல் ரூ.50 ஆயிரம் வரை விலை நிர்ணயம்

by MuthuKumar

செங்கோட்டை: சதுர்த்தி விழாவிற்கு 7 நாட்களே உள்ள நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. 1 அடி முதல் 12 அடி வரை விதவிதமாக தயாராகி உள்ள சிலைகள், ரூ.150 முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா, வருகிற 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பாளை. சமாதானபுரம், திருமால்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாராகி விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை, இலஞ்சி பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள், சதுர்த்தியை முன்னிட்டு 1 அடி முதல் 12 அடி உயரம் வரை விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை செய்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை விநாயகர் சிலைகள் செய்து விற்பனை செய்வதால் தங்களுக்கு உபரி வருமானமும், தொழில் பாதுகாப்பும் கிடைப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், வீடுகளில் வைத்து வழிபடுவதற்கு சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். 6 முதல் 12 அடி வரை உயரமுள்ள விநாயகர் சிலைகளை வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் ரூ.1000 முதல் ரூ.50 ஆயிரம் வரை வாங்கி செல்கின்றனர். செங்கோட்டையில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் இடத்திலேயே பிரதிஷ்டை செய்து நகர வீதிகளின் வழியாக ஊர்வலமாக திறந்த ஜீப், லாரிகளில் ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தையாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல வண்ணங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. வீட்டில் வைத்து பூஜை செய்யும் வகையில் சிறிய அளவிலான சிலைகள் மற்றும் 4 அடியில் இருந்து 9 அடி உயரம் வரையிலான பெரிய சிலைகளும் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். பெரிய விநாயகர் சிலைகள் ரூ.15 ஆயிரம், ரூ.12 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.8 ஆயிரம் என்கிற விலையில் விற்கப்படுகின்றன. கையில் தூக்கிச் செல்லும் வகையிலான சிறிய சிலைகள் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

சதுர்த்திக்கு தயாரான விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் மரவள்ளி கிழங்கு மாவு, பேப்பர் கூல், ஜவ்வரிசி தண்ணீர் ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்டு வெயிலில் காய வைத்து வர்ணம் பூசப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

7 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi