திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்கள் கோலாகலமாக நடந்த பிரமோற்சவம் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மலையப்ப சுவாமி தேவி, பூதேவி தயார்களுடன் பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், கல்ப விருட்சம், கருட, சிம்ம, அனுமந்த வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் காலையும், இரவும் நான்கு மாட வீதியில் சிறப்பு அலங்காரங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரமோற்சவத்தின் 9ம் நாள் மற்றும் கடைசி நாளான நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை கோயிலில் இருந்து அதிகாலை உற்சவ மூர்த்திகளும், சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராக சுவாமி கோயிலுக்கு வந்தனர்.
பின்னர், வராக சுவாமி கோயில் எதிரே மலையப்ப சுவாமி தாயார்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் பால், தயிர், தேன், இளநீர், உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, குளத்தை சுற்றியிருந்த அயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம். அத்துடன் பிரமோற்சவம் நிறைவு பெற்ற நிலையில் நேற்றிரவு 9 மணிக்கு கொடி இறக்கப்பட்டது.