Saturday, April 27, 2024
Home » கர்ப்பப்பை வாய் புற்றுநோயை அகற்ற உறுதி எடுப்போம்!

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை அகற்ற உறுதி எடுப்போம்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிப்படைகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பெண்களை அதிக
அளவில் தாக்கும் புற்றுநோயாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மாறிவருகிறது. இதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்கிறார் காவேரி மருத்துவமனையின்
மகப்பேறு நிபுணர் டாக்டர் அனிதா.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஹியூமன் பாப்பிலோமா என்ற வைரஸ் பாதிப்பினால் ஏற்படுகிறது. வைரஸ் பாதிப்பினால் ஏற்படக்கூடிய தொற்று கேன்சராக மாற 10 முதல் 15 ஆண்டுகளாகும். எப்போது ஒரு பெண்ணின் கர்ப்பப்பை வாய் பகுதியில் வைரஸ் தொற்று ஏற்படுகிறதோ, அதற்கு பிறகு HPV வைரஸ் மெல்ல மெல்ல வீரியம் அடைய துவங்கும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பினை பாப்ஸ்மியர் மற்றும் HPV, DNA என்ற இரண்டு வகையான ஸ்கிரீன் டெஸ்டுகள் மூலம் கண்டறியலாம். இதன் மூலம் புற்றுநோயின் பாதிப்பு எந்த நிலையில் உள்ளது என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறையினை நாம் உடனடியாக துவங்கினால், இந்த நோயின் பாதிப்பில் இருந்து முற்றிலும் காப்பாற்ற முடியும். கர்ப்பப்பை வாய்புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் அதனை சிகிச்சை மூலமாக குணப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் .

நோயின் பாதிப்பு குறித்து கண்டறிந்த உடனே மகப்பேறு நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். நோயின் தாக்கம் முதல் அல்லது இரண்டாவது நிலையில் இருந்தால் அதனை அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காணலாம். மூன்று அல்லது நான்காம் நிலையில் கர்ப்பப்பை வாய் மட்டுமில்லாமல் மற்ற இடங்களுக்கும் பரவுவதற்கான வாய்ப்பு இருந்தால் கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் தருவதன் மூலம் நோயின் தாக்கத்தினை கட்டுப்படுத்தலாம். ஆதலால் நோயின் தாக்கம் குறித்து அதற்கான சிகிச்சை முறைகளை மருத்துவரின் ஆலோசனைப் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தற்போது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பெண்களை பாதிக்காமல் இருக்க அதற்கான முதல் கட்ட பாதுகாப்பு தடுப்பூசி. HPV வைரஸ்களில் உள்ள காப்சிட் புரதங்கள் கொண்டு இந்த தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இது பெண்களின் உடலில் ஆன்பாடிஸ்களை உற்பத்தி செய்வதால், அதன் மூலம் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். இது புற்றுநோய் பாதிக்காமல் ஒரு கேடயமாக மாறும். இந்த தடுப்பூசி 9 முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்றது மற்றும் தடுப்பூசி 45 வயது வரை கொடுக்கலாம்.

WHO இதுகுறித்து அமைத்துள்ள பிரசாரத்தில் 2030க்குள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பினை முற்றிலும் அழித்துவிடலாம் என்று குறிப்பிட்டுள்ளது. அதற்கு நாம் சிலவற்றை பின்பற்ற வேண்டும். 90% பெண்கள் இந்த தடுப்பூசியினை போட்டுக்கொள்ள வேண்டும். அனைத்து பெண்களில் 70% பரிசோதனை செய்துகொள்வது மிகவும் அவசியம். மேலும் பாதிக்கப்பட்ட 90% பெண்கள் உடனடியாக சிகிச்சை முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை பின்பற்றினால் கண்டிப்பாக 2030ல் கர்ப்பப்பை வாய் புற்றுநோயினை முற்றிலும் அழிக்க முடியும்’’ என்றார் டாக்டர் அனிதா.

You may also like

Leave a Comment

4 + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi