மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் தயாநிதி மாறன், பாஜவில் வினோஜ் பி.செல்வம், தேமுதிகவில் பார்த்தசாரதி என 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 31 பேர் சுயேச்சைகள். மத்திய சென்னை தொகுதிக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை செனாய் நகர் புல்லா அவென்யூவில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் குமார் மனுவை பரிசீலித்தார். ஒவ்வொரு வேட்பாளர்களின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. இதில் ஆவணங்கள் சரியாக உள்ளவர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.
பாஜ சார்பில் போட்டியிடும் வினோஜ் பி.செல்வம் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது \”பாஜ வேட்பாளரின் 2 ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. உரிய ஆவணங்கள் இல்லை. எனவே, பாஜ வேட்பாளரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க வேண்டும்\” என்று வலியுறுத்தினர். இதனால், வேட்புமனு பரிசீலனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி விளக்கம் தெரிவித்தார். அதன் பின்னரே பரபரப்பு அடங்கியது. தொடர்ந்து மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வேட்புமனுவும், தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.