சென்னை: சமரசத் தீர்வு மையத்தின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா நேற்று தொடங்கி வைத்தார். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு அதிக செலவின்றி விரைவாக தீர்வு பெற சமரச தீர்வு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தீர்வு மையங்கள் மூலம் ஏராளமான வழக்குகள் சுமுகமாக பேசி தீர்க்கப்பட்டு வருகின்றன. சமரச தீர்வு மையங்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவ மாணவிகளுடைய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா இந்த பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மூத்த நீதிபதியும் சமரச தீர்வு மையத்தின் தலைவருமான ஆர்.மகாதேவன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நீதிபதிகள் அனிதா சுமந்த், ஜி.கே.இளந்திரையன், பரத சக்கரவர்த்தி, சத்திய நாராயண பிரசாத், வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள், சட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.