செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், அனுமந்தபுரம் முள்ளேரி பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு மூன்று மகள் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகளான தீபிகா (18) 12ம் வகுப்பு படித்து முடித்து விட்டு மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீபிகா அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதை பத்மா கண்டித்துள்ளார். தொடர்ந்து இப்படியே செய்து வந்தால் திருமணம் செய்து விடுவதாகவும் கூறி உள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், கோபித்துக்கொண்டு வீட்டை வெளியே சென்ற தீபிகா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே, அதே பகுதியில் கன்னியம்மாள் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தீபிகா உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்த செங்கல்பட்டு போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.