சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 72வது பிறந்தநாள் விழா சத்தியமூர்த்தி பவனில் நாளை கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகள் வகித்த கே.எஸ்.அழகிரி, 2019ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். நாடாளுமன்ற தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டமன்ற தேர்தலில் 25ல் 18 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். உள்ளாட்சி தேர்தலிலும் பெரும் வாரியான இடங்களில் வெற்றி பெற்றனர். தமிழக காங்கிரஸ் தலைவராக 4 ஆண்டுகளை கடந்து 5வது ஆண்டாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கே.எஸ்.அழகிரியின் 72வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை சத்தியமூர்த்திபவனில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் தலைமையில் காங்கிரசார் செய்து வருகின்றனர். அதன்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கேக் வெட்டி கட்சியினருக்கு இனிப்பு வழங்கப்படுகிறது. தொடர்ந்து, ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட உள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கே.எஸ்.அழகிரி, நல்ல உடல் நலத்துடன் இருப்பதற்காக கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட உள்ளது.