Tuesday, May 14, 2024
Home » தமிழ்நாட்டில் சைனிக் பள்ளியை தரம் உயர்த்தக்கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் இறுதி அவகாசம்

தமிழ்நாட்டில் சைனிக் பள்ளியை தரம் உயர்த்தக்கோரி வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் இறுதி அவகாசம்

by Francis

சென்னை: தமிழகத்தில் உள்ள ‘சைனிக்’ பள்ளியை தரம் உயர்த்த கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதில் தர உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானல் தாலுகா பூலத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்திய ராணுவத்தில் திறமை மிக்க வீரர்களை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சைனிக் பள்ளி (மாணவர் படைத்துறை பள்ளி) தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அமராவதியில் உள்ளது. இந்த பள்ளியில் நுழைவு தேர்வு மூலம் 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த பள்ளியில் வெளிமாநில மாணவர்களுக்கு 33 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நுழைவு தேர்வு இதற்கு முன்பு சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் நடத்தப்பட்டுவந்தது. தற்போது அமராவதி நகரில் மட்டுமே நடைபெறுகிறது. இந்த பள்ளியின் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு தரப்படவில்லை. இந்த பள்ளியின் மேம்பாட்டுக்கு எந்த நடவடிக்கையையும் ஒன்றிய அரசு எடுக்கவில்லை. ஆனால், அஜ்மீர், பெங்களூர், பெல்காம், சால் மற்றும் தோல்பூரில் உள்ள ராணுவ பள்ளிகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்பட்டு அந்த பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள சைனிக் பள்ளியை தரம் உயர்த்தவும், நுழைவுத் தேர்வை ஒரு முறை மட்டுமே நடத்த வேண்டும் என்றும், ஏற்கனவே உள்ளபடி 6 இடங்களில் நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும் என்றும் கோரி ஒன்றிய அரசுக்கும் தமிழக அரசுக்கும் கடிதம் எழுதியும் நடவடிக்கை இல்லை. எனவே, அமராவதி சைனிக் பள்ளியை நவீன தொழில்நுட்பங்களுடன் தரம் உயர்த்துமாறு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் கடந்த ஆண்டு டிசம்பரில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவுக்கு பதில் தருமாறு உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய இறுதி அவகாசம் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 17க்கு தள்ளிவைத்தனர்.

 

You may also like

Leave a Comment

fourteen + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi