Thursday, May 16, 2024
Home » மிகவும் போற்றப்படும் நட்சத்திரத்தை பலர் இழந்துள்ளனர்: கேப்டன் விஜயகாந்த் மறைவு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு

மிகவும் போற்றப்படும் நட்சத்திரத்தை பலர் இழந்துள்ளனர்: கேப்டன் விஜயகாந்த் மறைவு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு

by Suresh

டெல்லி: மிகவும் போற்றப்படும் நட்சத்திரத்தை பலர் இழந்துள்ளனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்(71) சிகிச்சை பலனின்றி கடந்த டிச.28ம் தேதி காலமானார்.

விஜயகாந்த் மறைவான செய்தி தேமுதிக தொண்டர்கள், சினிமா ரசிகர்கள், திரையுலகினர், பொதுமக்கள் என பலரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. விஜயகாந்த் உடல் கடந்த டிச.29ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் மறைவிற்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.

“விஜயகாந்தின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ்த் திரைப்பட உலகின் ஜாம்பவானான இவரது வசீகர நடிப்புத்திறன் கோடிக்கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஒரு அரசியல் தலைவராக, அவர் பொதுமக்கள் சேவையில் தீவிர அர்ப்பணிப்புடன் செயல்பட்டார், தமிழக அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அவரது மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது. என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்த அவருடன் பல ஆண்டுகளாக நான் நடத்திய உரையாடல்களை அன்புடன் நினைவு கூர்கிறேன். இந்தச் சோகமான தருணத்தில், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் எண்ணற்ற ஆதரவாளர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன” என ஏற்கனவே பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

இந்நிலையில் இன்று(ஜன.03) மிகவும் போற்றப்படும் நட்சத்திரத்தை பலர் இழந்துள்ளனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது; “விஜயகாந்த் பன்முக ஆளுமை கொண்டவர்; பிறருக்காக தனது வாழ்க்கையை வாழ்ந்தவர்.

திரைப்படங்களில் அநீதி, ஊழல், தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்க்கும் கதாபாத்திரங்களில் நடித்தவர் விஜயகாந்த். மிகவும் போற்றப்படும் நட்சத்திரத்தை பலர் இழந்துள்ளனர். மேலும் பலர் தங்கள் அன்புக்குரிய தலைவரை இழந்துள்ளனர். நானும் ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

two × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi