சென்னை: விஜயகாந்தின் மறைவு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் குறித்து கேட்டறிந்த, படித்த, பார்த்த எத்தனையோ பல தகவல்களை பலர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னாள் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் விஜயகாந்த் மிகவும் கறாராக நடந்து கொள்வாராம். அதாவது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மன்ற வேலைகளை சனி, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை தினங்களில் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருந்துள்ளார்.
திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அவரவர் தொழிலையும், குடும்பத்தினரையும் தான் வார நாட்களில் கவனிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார். இப்படித்தான் ஒரு முறை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரசிகர் ஒருவர் விஜயகாந்தை சந்திக்க வார நாட்களில் சென்னை வந்துவிட்டார். அவரை அழைத்த விஜயகாந்த், ”என் தொழில் நடிக்கிறது அதை நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன், அதேபோல் ஊரில் உன் தொழில் என்னவோ அதை முதலில் கவனி, லீவு நாள்ல வந்து என்னை பார்த்தால் போதும்” என அட்வைஸ் அளித்து ஊருக்கு அனுப்பி வைத்த நிகழ்வும் நடந்துள்ளது.
தன்னாலும், தனது மன்றத்தாலும் எந்தவொரு ரசிகரின் குடும்பமும் பாதிக்கக் கூடாது என்பதில் விஜயகாந்த் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தார். ஏதாவது ஒரு தொழில் செய்துக் கொண்டே மன்ற வேலைகளை பாருங்கள், முழு நேரமும் எனக்காக யாரும் நேரம் செலவிட வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு பாடமெடுத்தவர் விஜயகாந்த். அந்த ரசிகர்கள் தான் பிற்காலத்தில் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது தொண்டர்களாக இணைந்து இன்று வரை தேமுதிகவில் இருந்து வருகின்றனர்.