புதுடெல்லி: வெளிநாட்டு மதுபானம் தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தரப்பில் வழக்கறிஞர் ஜெய்சுகின், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் உரிமம் உட்பட அனைத்திலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் மொத்தம் 11 வெளிநாட்டு மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளது. அவர்கள் அனைவரும் உயர் அரசியல் செல்வாக்கு கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதுபோன்ற நிறுவனங்களில் இருந்து தயாரிக்கப்படும் மதுபானங்களில் நிறைய போலியாக இருப்பதால் உடல்நலம் பாதிக்கப்படுகிறனர். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது கொடுக்க கூடாது. அதேபோன்று விற்கப்படும் மதுக்களுக்கு முறையான ரசீது வழங்கப்பட வேண்டும். முக்கியமாக விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் மாலை 8 வரை என்று மாற்றி அமைக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவானது நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பிரசாந்த குமார் மிஸ்ரா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த மனுவை விசாரிப்பதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. தற்போது மதுபான கொள்கைகளில் நிறைய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கொள்கை ரீதியான விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை’ என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.