Wednesday, May 8, 2024
Home » திமுக கூட்டணியை ஆதரித்து வரும் 29ம் தேதி முதல் பிரசாரம்: மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு

திமுக கூட்டணியை ஆதரித்து வரும் 29ம் தேதி முதல் பிரசாரம்: மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு

by Francis

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரசார வழிகாட்டுதல் கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஈரோட்டில் இருந்து மார்ச் 29ம் தேதி கமல்ஹாசன் பிரசாரத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் கமல்ஹாசன் பேசுகையில், சந்தர்ப்பவாதம் என்பது ஒரு வாதமே இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. ரிமோட்டை எடுத்து டிவியில் அடித்தீர்களே? நீங்கள்தானே இப்போது அங்கு செல்கிறீர்கள் என்று கூறுகின்றனர். ரிமோட் இன்னும் என் கையில்தான் உள்ளது. டிவியும் இன்னும் அங்கேதான் இருக்கிறது. ஏனெனில், நம்ம வீட்டு டிவி, நம்ம வீட்டு ரிமோட். ஆனால், அந்த டிவிக்கான கரண்டையும், ரிமோட்டுக்கான பேட்டரியையும் மத்தியில் உருவாக்கும் ஒரு சக்தி உருவாக்கிக்கொண்டிருக்கிறது. எனவே, ரிமோட்டை இனிமேல் நான் எறிந்தால் என்ன? வைத்திருந்தால் என்ன? அதுபோன்ற செய்கைகளுக்கு இனிமேல் அர்த்தமே இல்லாமல் போய்விடும். நான் ஒரு தனிப்பட்ட மனிதரை என்றுமே தாக்கியது இல்லை. மோடி என்பவர் மரியாதைக்குரிய பாரத பிரதமர். அவர் இன்று இந்த அரங்கத்துக்குள் வந்தால், மரியாதைகொடுப்பேன். அதற்காக எனது தன்மானத்தைவிட்டு தலை வணங்க மாட்டேன்.

சாதியம் பேசாதே என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவர்கள்தான் இன்று வெள்ளை தாடியுடன் இங்கே அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு மறுபடியும் சாதியை கற்றுக்கொடுக்கும் ஒரு மாபெரும் திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சியோ, ஒரு திட்டமோ எத்தனை பெரியதாக இருந்தாலும், அதை தகர்க்க வேண்டியது என் கடமை. அரசியல் களத்தில், எதிரி யார் என்பதை முடிவு செய்த பிறகுதான் வெற்றி நிச்சயம். நீங்கள் அப்படி எதுவும் இல்லாமல் மய்யம் என்று கூறுகிறீர்களே, இது எப்படி சரியாக வரும் என்று என்னிடம் கேட்கின்றனர். நான் எனது எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன். எனது அரசியல் எதிரி சாதியம்தான். இந்த தேர்தல் இந்தியாவுக்கானது. தமிழகத்துக்கான களம் 2026ல் அமையப் போகிறது. மக்கள் நீதி மய்யத்தின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை தியாகம் என்பதைவிட வியூகம் என்று புரிந்துகொள்ள வேண்டும். காரணம், எந்தெந்த ஏரியா எனக்கு கொடுக்கப்படுமோ என்று பயந்துகொண்டவர்களுக்காக எல்லாம் நான் பிரசாரத்துக்குச் செல்லப்போகிறேன் எனறார்.

 

You may also like

Leave a Comment

12 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi