தேனி, மே 8: வெப்ப அலையில் இருந்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களை பாதுகாப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் தொழிலாளர் துறை சார்பில் நடத்தப்பட்டது. தேனி மாவட்டத்தில் நிலவிவரும் வெப்பஅலையில் இருந்துபொதுமக்கள், பணியாளர்களை காப்பதற்கான வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்திற்கு தேனி தொழிலாளர் உதவி ஆணையர் மனுஜ்ஷ்யாம்சுந்தர் தலைமை வகித்தார்.தேனி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தின்போது, தேனி மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் போன்றவற்றில் தற்போது நிலவி வரும் கோடை காலத்தின் வெப்ப அலையில் இருந்து பொதுமக்கள் மற்றும் பணியாளர்களை காக்கும் வகையில், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இருதரப்பினருக்கும் அவரவர் பணிபுரியும் நிறுவன வளாகத்தில் குடிநீர் வசதி, சுத்தமான கழிப்பறை வசதி, குளியலறை வசதி உறுதி செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு தங்குமிடம், சரியான இருக்கை வசதிகள், சுழற்சி முறையில் ஓய்வு நேரம், சட்டப்படியான வேலைநேரம் போன்ற பணி நிலைமைகள் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.