பலூர்காட்: குடியுரிமை திருத்த சட்டம் பற்றி மம்தா பானர்ஜி திரித்து கூறுகிறார் என்றும் வாக்கு வங்கிக்காக ஊடுருவல்காரர்களை அவர் அனுமதிக்கிறார் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார். குடியுரிமை திருத்த சட்டம் 2019 ஐ கடந்த மாதம் ஒன்றிய அரசு அமல்படுத்தியது. புதிய சட்டத்தின்படி பாகிஸ்தான்,வங்கதேசம்,ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாதோர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கம், பலூர்காட்டில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,‘‘ குடியுரிமை திருத்த சட்டத்தை மம்தா பானர்ஜி திரித்து பேசி வருகிறார். அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதை மம்தா ஏன் எதிர்க்கிறார். குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்போர் யாரும் பயப்பட வேண்டாம். அவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது.காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய மாட்டார்கள். அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது அரசின் கடமையாகும்.
அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்க்கும் மம்தா வாக்கு வங்கி அரசியலுக்காக ஊடுருவல்காரர்களை அனுமதிக்கிறார். சந்தேஷ்காளி சம்பவங்கள் மிகவும் அவமானகரமானது.முதல்வர் ஒரு பெண்ணாக இருந்த போதும் சந்தேஷ்காளி சம்பவத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை பாதுகாக்க முயற்சித்தார்’’ என்றார்.