லக்னோ: “2025க்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்” என்ற உத்தரவாதங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை சமாஜ்வாடி கட்சி நேற்று வௌியிட்டது. சமாஜ்வாடி கட்சியின் 20 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை கட்சி தலைமை அலுவலகத்தில் அகிலேஷ் யாதவ் நேற்று வௌியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், 2025ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும், தனியார் துறைகளில் அனைத்து பிரிவினரின் பங்களிப்பு உறுதி செய்யப்படும்” என்று உறுதி அளித்தார்.
தொடர்ந்து பேசிய அகிலேஷ் யாதவ், “அக்னி வீரர் திட்டம் ரத்து செய்யப்பட்டு, ராணுவ ஆள்சேர்ப்பில் பழைய முறையே பின்பற்றப்படும். மேலும் “விளைபொருள்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும், விவசாய கடன் தள்ளுபடி, விவசாய ஆணையம் அமைப்பு, இலவச நீர்ப்பாசன வசதி, நிலமற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் தரப்படும்” என்று தெரிவித்தார்.