புழல்: சோழவரத்தில், லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். சென்னை சோழவரம் அடுத்த வெள்ளிவாயில் கிராமத்தை சேர்ந்தவர் குமார் என்ற அப்பன் ராஜ் (40). இவர், போர்வெல் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்றுமுன்தினம் சகதொழிலாளர்களுடன் மாதவரம் திருவள்ளூர் தெருவில் போர்வெல் பணிகளை முடித்துவிட்டு, மஞ்சம்பாக்கம் பகுதிக்கு சென்றார். அப்போது குமாருக்கு திடீரென கடும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சக தொழிலாளர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதனால், சக தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த குமாரின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் வந்தனர். பின்னர், அவர்கள் குமாரின் சாவில் மர்மம் உள்ளது என்று கூறி, மருத்துவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.பின்னர், சடலத்தை மீட்ட போலீசார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.