நாகர்கோவில், ஆக.2: தென் தமிழக கடல் பகுதியில் 2.2 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வறண்ட வானிலை காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் காணப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடையாத நிலையில் அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் மளமளவென்று சரிந்து வருகிறது. மாவட்டத்தில் இன்று (2ம் தேதி) நள்ளிரவு வரை தென் தமிழக கடல் பகுதியில் பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் 1.5 மீட்டர் முதல் 2.2 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 29.33 அடியாக இருந்தது. அணைக்கு 336 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 682 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 23.75 அடியாகும். அணைக்கு 31 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-1ல் 11.38 அடியும், சிற்றார்-2ல் 11.48 அடியும் நீ்மட்டம் உள்ளது. பொய்கையில் 11.20 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 3.28 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கி வருகின்ற முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 13.80 அடியாக உள்ளது. முக்கடல் அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.