தா.பழூர், நவ. 11: தா.பழூர் அருகே மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே புரந்தான் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் கொளஞ்சிநாதன். இவருக்கு அப்பகுதி கொள்ளிடம் ஆற்று படுகை பகுதிகளில் இருந்து மாட்டுவண்டிகளில் மணல் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக வந்த 2 மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்ய முயற்சி செய்தபோது மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த இருவரும் தப்பி ஓடினர். இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாட்டு வண்டிகளில் சோதனை செய்து பார்த்த போது அதில் கொள்ளிடம் ஆற்று படுகை பகுதிகளில் இருந்து மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.