திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அக்காள் மகள் விழாவிற்கு தாய் மாமன்கள் பாரம்பரிய முறைப்படி 15 மாட்டு வண்டிகளில் சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்தவர் ஜெயபால். டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ரம்யாவிற்கு பூப்புனித நீராட்டு விழா நேற்று முருகபவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தாய்மாமன் பெருமாள் மற்றும் அவரது தம்பிகள் தனது அக்கா மகளுக்கு செய்ய வேண்டிய சீர்வரிசை பொருட்களான பட்டுச்சேலை, தங்க நகைகள், பழங்கள், அரிசி மூட்டை, ஆடு, பலசரக்கு சாமான், பித்தளை- சில்வர் பாத்திரங்கள், பூமாலை, கேக் வகைகள் ஆகியவற்றை 15 மாட்டு வண்டிகளில் வைத்து ஊர்வலமாக பழநி சாலை வழியாக மேளதாளங்கள் முழங்க தாரை, தப்பட்டைகள் அடிக்க வாணவேடிக்கையுடன் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர். நவீன கம்ப்யூட்டர் காலத்தில் மாட்டுவண்டி என்றாலே என்னவென்று தெரியாத தற்போதுள்ள இளைஞர்கள் மத்தியில், பாரம்பரிய முறைப்படி சீர்வரிசை கொண்டு வரப்பட்டது திண்டுக்கல்லில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.