திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 2 ஆண்டுகளில் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றும், மற்ற மாநிலங்கள் ஆச்சரியப்படுமளவுக்கும் சிறப்பான முறையில் திராவிட மாடல் அரசு இயங்கி வருகிறது. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அரசு கஜானா பெருமளவு காலியாகி இருந்தது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டை பொருளாதாரரீதியாக வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த 2021ல் சென்னையில் ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ என்ற மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்தியது. தொடர்ந்து சீரான இடைவெளியில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் எண்ணற்ற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி வலுவாக இருப்பது அவசியம். இந்தியாவின் ஏற்றுமதியில் தென்மண்டலம் 27 சதவீதத்திற்கும் அதிக பங்களிப்பை வழங்கி வருகிறது.
இதில் தமிழ்நாட்டின் பங்கு மிக மிக அதிகம். அடுத்த சில ஆண்டுகளுக்குள் இதனை 35 சதவீதமாக மாற்றும் முயற்சியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி என்ற பொருளாதார அளவை எட்ட வேண்டுமென்பதை இலக்காக கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயலாற்றி வருகிறார். இதை மனதில் கொண்டுதான் தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட பெருநகரங்களில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
கடந்தாண்டு ஜூலையில் சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.1,25,244 கோடி முதலீட்டில், சுமார் 75 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை பெற்றிடும் வகையில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாயின. அதுமட்டுமின்றி அதே மாநாட்டில் ரூ.22,252 கோடி முதலீட்டில், 17,654 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 21 திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. கடந்த 2021 மே முதல் தற்போது வரை சுமார் 3.90 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறும் வகையில், 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இதன்மூலம் ரூ.2.70 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் கிடைக்கப்பெறும். இதை மனதில் கொண்டு, தமிழ்நாட்டை பொருளாதாரரீதியாக முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் முயற்சியாகத்தான் வரும் 2024, ஜனவரி 10, 11ம் தேதிகளில் சென்னையில் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ நடக்க உள்ளது. இதில் உலகின் முன்னணி நாடுகள் பல பங்கேற்க உள்ளன. இந்த மாநாடு தமிழ்நாட்டின் சரித்திரத்தில் ஒரு மைல் கல்லாக, திமுக அரசுக்கு மணி மகுடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 23ம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நேற்று முன்தினம் ஜப்பான் நாட்டின் மிட்சுபிஷி நிறுவனத்தின் ஏர்கண்டிஷனர் மற்றும் கம்ப்ரசர் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த தொழிற்சாலை மூலம் சுமார் 2 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள், ஐடி பார்க்குகள் வர உள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்த பின் மேலும், பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டுக்கு வரும் வாய்ப்புகள் இப்போதே பிரகாசமாக தெரிகிறது.