மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பூதகுடி லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் அபிஷேக் குமார்(23). இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பதாக தகவல் கிடைத்து, அலங்காநல்லுார் எஸ்ஐ ரவிச்சந்திரன், கிரேடு1 போலீஸ்காரர் சுரேந்திரன் அங்கு சென்றனர். சோதனையில் 15 பாக்கெட்கள் அடங்கிய 2 பண்டல்களை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதியாமல் இருக்க அபிஷேக் குமாரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக பெற்றனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி சிவபிரசாத்திற்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் லஞ்சம் பெற்றது உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து எஸ்பி சிபாரிசின்படி இருவரையும் சஸ்பெண்ட் செய்து டிஐஜி பொன்னி நேற்று உத்தரவிட்டார்.