மும்பை: போதை பொருள் வழக்கில் நடிகர் ஷாரூக்கானின் மகனை விடுவிக்க ரூ.25 கோடி லஞ்ச பேரம் பேசிய வழக்கில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு முன்னால் அதிகாரி சமீர் வான்கடே இன்று ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியது. கடந்த 2021ம் ஆண்டு மும்பையில் சொகுசு கப்பல் ஒன்றில் போதை பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை போதை பொருள் தடுப்பு அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆரியன்கான் போதை பொருள் பயன்படுத்தியதாக ஆதாரம் இல்லை என்று விசாரணைக்குழு அறிக்கை அளித்ததை அடுத்து வழக்கில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் இருந்து ஆரியன்கானை விடுவிக்க ரூ.25 கோடி லஞ்சபேரம் பேசியதாக சமீர் உள்ளிட்டோர் மீது சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றது.
ஷாரூக்கானிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டு பிறகு ரூ.18 கோடி என முடிவு செய்யப்பட்டதாகவும், முன்பணமாக ரூ.50 லட்சத்தை ஆரியன்கான் வழக்கில் நேரடி சாட்சியான கே.பி.மொஸாபி பெற்றதாகவும் சிபிஐ தரப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 12ம் தேதி சமீர் வான்கடே மற்றும் 4 பேர் தொடர்புடைய 29 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.
இந்நிலையில் ரூ.25 கோடி லஞ்சபேரம் பேசிய வழக்கில் சமீர் வான்கடே இன்று ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியது. இதனிடையேஆரியன்கான் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிற்கும் ரோல்ஸ் கடிகாரத்தை சமீர் வான்கடே குழுவினர் பறித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பாகவும் போதை பொருள் வழக்கில் மேலும் சில தகவல்களை பெற சமீர் வான்கடேவிடம் விசாரணை நடத்தப்படுகிறது.