கோவை: கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் பருவநிலை காரணமாக ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் சிறுவனை பரிசோதனை செய்தபோது, அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது உறுதியானது. பின்னர், சிறுவன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.