Thursday, May 9, 2024
Home » தென் இந்தியாவில் மட்டுமல்ல, வட, வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜவின் தோல்வி 100 சதவீதம் உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

தென் இந்தியாவில் மட்டுமல்ல, வட, வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜவின் தோல்வி 100 சதவீதம் உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

by Francis

சென்னை: தென் இந்தியாவில் மட்டுமல்ல, வட மாநிலம், வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜவின் தோல்வி 100 சதவீதம் உறுதியாகிவிட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மதுரவாயல் காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ தலைமை தாங்கினார். வளசரவாக்கம் 11வது மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன், வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் அயப்பாக்கம் அ.ம.துரைவீரமணி, தலைமை பொதுக் குழு உறுப்பினர் இராமாபுரம் வ.செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் வீர.கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திமுக பொருளாளர் மற்றும் பெரும்புதூர் தொகுதி வேட்பாளர் டி.ஆர்‌.பாலு மற்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளிடம் விளக்கிக் கூறினர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்திற்கு பாஜ தொடர்ந்து ஓரவஞ்சனை செய்து வருகிறது. நாம் கேட்ட எந்த நிதியும் அவர்கள் தரவில்லை. இதை சுட்டிக்காட்டி 6 முறை நாடாளுமன்றத்தில் டி.ஆர். பாலு பேசினார். பாஜவின் தோல்வி முகத்தை கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் நிகழ்வுகளைக் கொண்டு நாம் அறிய முடியும். வடகிழக்கு மாநிலம் என 7 மாநிலங்களைச் சொல்வார்கள்.

அதில், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜ போட்டியிடாது, மாநிலக் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம் என அறிவித்துள்ளனர். இந்த மூன்று மாநிலங்கள் மட்டுமல்ல, வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களிலும் பாஜ டெபாசிட் பெற முடியாது என்ற காரணத்தை உணர்ந்துள்ளனர். இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில் 3ல் இருந்து விலகி உள்ளனர். போகப்போக எத்தனை மாநிலங்களில் போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறோம் என சொல்வார்களோ தெரியாது. பாஜ ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் வதோதரா மற்றும் சம்பர்கந்தா லோக்சபா தொகுதிகளுக்கு பாஜ சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், ரஞ்சன்பென் பட் மற்றும் பிகாஜி தாக்கூர் ஆகியோர் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதற்கு அர்த்தம், தேர்தலில் வெற்றி பெறப் போவதில்லை. வெற்றி பெறாத இடத்தில் நாங்கள் ஏன் நிற்க வேண்டும் என விலகி உள்ளனர். தென் இந்தியாவில் மட்டுமல்ல, வட மாநிலங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலும், பாஜவின் தோல்வி 100 சதவீதம் உறுதியாகி உள்ளது. பாஜ ஆட்சியில் வெறுப்பு அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் ஒரு முதல்வர் கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லி முதல்வர் கைதாகியுள்ளார். இரண்டு மாத காலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட இரு மாநில முதல்வர்கள் கைது செய்யப்படுவது, இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்தியா கூட்டணியின் வெற்றி மிகப்பெரிய அளவில் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

 

You may also like

Leave a Comment

15 + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi