புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், கர்நாடகாவை சேர்ந்த 4 பாஜ எம்பிக்கள் கார்கேவுக்கு பதில் கடிதம் எழுதி உள்ளனர். இதில், கார்கேவின் கடிதத்தில் அதிக அலங்கார நடையும், உண்மைகள் குறைவாக இருப்பதாகவும் விமர்சித்து இருந்தனர். இந்நிலையில் கர்நாடகா பாஜ எம்பிக்கள் கடிதம் எழுதியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ப.சிதம்பரம் கூறுகையில்,‘‘மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் கார்கே, பிரதமருக்கு கடிதம் எழுதுவதற்கான உரிமை இருக்கிறது. ஜனநாயக நாட்டில் பிரதமர் இதுபோன்ற கடிதங்களுக்கு பதில் அளிக்க வேண்டும். ஆனால் இந்த கடிதம் முக்கியத்துவம் இல்லாதது என்று பிரதமர் கருதுகிறார். எனவே தான் பிரதமருக்கு பதிலாக 4 பாஜ எம்பிக்கள் , பதிலை அனுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். எந்த ஒரு விமர்சனத்துக்கும் பாஜவின் சகிப்புதன்மையின்மைக்கு பாஜ எம்பிக்களின் கடிதம் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்” என்றார்.