திருப்பரங்குன்றம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகிப்பவர் பேராசிரியர் ஜெ.குமார். இவர் கடந்த ஏப்ரல் 2022ல் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்தார். இவரது பதவிக்காலம் வரும் 2025 ஏப்ரல் வரை இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து அதற்கான கடிதத்தை பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து வரும் மே 14ம் தேதி முதல் இவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக பல்கலைக்கழக அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.