புதுடெல்லி: மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக பாஜ அறிவித்துள்ளது. பாஜ ஆளும் மணிப்பூர் மாநிலம் இனக்கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதமாக அங்கு மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். வீடு, உடைமைகளை இழந்த மக்கள் பலரும் அரசு முகாமிலேயே இதுவரை தஞ்சமடைந்துள்ளனர்.
நாகலாந்திலும் அம்மாநில மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக ஒன்றிய பாஜ அரசு ஏமாற்றி உள்ளது. இதனால் வடகிழக்கு மாநிலங்களில் பாஜ மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், மணிப்பூர், நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் போட்டியிலிருந்து பாஜ விலகுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து பாஜவின் வடகிழக்கு ஒருங்கிணைப்பாளர் சம்பித் பத்ரா அளித்த பேட்டியில், ‘‘கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவின் பேரில், மணிப்பூர், மேகாலயா, நாகலாந்தில் மாநில கட்சிகளுக்கு பாஜ ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.
மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சிக்கும், நாகலாந்தில் என்டிபிபி கட்சிக்கும், மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி கட்சிக்கும் நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். இம்முறை மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணியை 400 இடங்களில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாநில கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறோம்’’ என கூறி உள்ளார்.
இந்த 3 மாநிலத்தில் 5 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் கடந்த தேர்தலில் பாஜ மணிப்பூரில் 2 தொகுதியில் போட்டியிட்டு ஒன்றில் வென்றது. மேகாலயாவில் 2 தொகுதியில் போட்டியிட்டு தோற்றது. நாகலாந்தில் போட்டியிடவில்லை. இம்முறை மணிப்பூர் உள்ளிட்ட இடங்களில் போட்டியிட்டால் நிச்சயம் தோல்வி உறுதி என்பதால் பாஜ தேர்தல் போட்டியிலிருந்து விலகியிருக்கலாம் என தேர்தல் நிபுணர்கள் கூறி உள்ளனர்.