பஹரம்பூர்: காந்தி குடும்பத்துடனான தொடர்பு காரணமாக வருண் காந்திக்கு பா.ஜ சார்பில் சீட் மறுக்கப்பட்டதாக ஆதிர்ரஞ்சன் சவுத்திரி தெரிவித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சகோதரர் சஞ்சய்காந்தியின் மகன் வருண்காந்தி பா.ஜவில் உள்ளார். ராகுல்காந்தியின் உறவினரான அவர் பிலிபிட் தொகுதியில் இருந்து 2 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இந்த முறை வருண்காந்திக்கு பா.ஜ சீட் வழங்கவில்லை.
அதற்கு பதில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜவில் இணைந்த ஜிதின் பிரசாதாவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் வருண்காந்தி தாயார் மேனகா காந்திக்கு சுல்தான்பூர் தொகுதியை பா.ஜ ஒதுக்கி உள்ளது. வருண்காந்திக்கு சீட் வழங்காதது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி கூறியதாவது;
வருண் காந்தி வலுவான தலைவர். அவர் ஒரு சுத்தமானவர், கற்றறிந்தவர். மிகவும் படித்த மனிதர். அவருக்கு ஒரு சுத்தமான இமேஜ் உள்ளது. காந்தி குடும்பத்துடன் வருண் காந்திக்கு தொடர்பு உள்ளது. இதனால்தான் பாஜ அவருக்கு மக்களவைத் தேர்தல் சீட் வழங்க மறுத்தது. அவர் வர வேண்டும், காங்கிரசில் சேர வேண்டும், அவர் வந்தால் மகிழ்ச்சி’ என்றார்.