பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மாண்டியா அடுத்த கெரகோடு கிராமத்தில் 108 அடி உயர கொடிக்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த காவிக்கொடி அகற்றப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது. இவ்விவகாரம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதால், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இச்சம்பவம் குறித்து கர்நாடகா ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், ‘ மாண்டியாவிலும் வகுப்புவாத அரசியலை பாஜ பின்பற்றுகிறது.
பாஜ தலைவர்கள் வகுப்புவாத நெருப்பை மூட்டுகின்றனர். தேசியக் கொடியை அவமதிப்பு செய்ததன் மூலம், துரோகிகளின் கட்சி பாஜ என்பது நிரூபணமாகி உள்ளது. தேசியக் கொடி, இந்திய அரசியல் சாசனம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாடு பிடிக்கவில்லை என்றால் பாஜவினர் பாகிஸ்தானுக்குச் செல்லலாம். மண்டியாவில் நடந்த சம்பவம் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் மாநில அரசு தீர்வு காணும்’ என்றார்.