சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய பாஜ அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் கடும் பாதிப்பை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. துன்பங்களில் இருந்து மக்களை விடுவிக்க ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை முதல்கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டார். அதன் மூலம் பா.ஜ.வுக்கு எதிராக 28 கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை அமைத்திருக்கின்றன. இதன்மூலம் பா.ஜ. ஆட்சியை அகற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் மீண்டும் பாரத நியாய யாத்திரையை ஜனவரி 14ம் தேதி ராகுல்காந்தி மணிப்பூரில் தொடங்கி, மார்ச் 20 அன்று மும்பையில் நிறைவு செய்கிறார். இந்த பயணத்தின் மூலம் மணிப்பூர் மக்கள் உள்ளிட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நியாயம் கேட்டு நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதன் மூலம் பாஜ ஆட்சி அகற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பிறக்கப் போகும் இந்த புத்தாண்டில் ஜனநாயக விரோத, பாசிச பாஜ ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைய வழிவகுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.