வேலூர்: வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் இன்று காலை திடீரென சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், 4 நாட்களுக்கு முன்னால் நான் தங்கியிருக்கும் பகுதியில் உள்ள கஜாக் என்பவரை பாஜகவை சேர்ந்தவர்கள் தாக்கி மண்டையை உடைத்து உள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். என்ன காரணம் தெரியல. எனக்கு வந்து வேலை செஞ்ச காரணத்தினால் இருக்கலாம். நான் 4 நாட்களாக பிரசாரத்தில் இருந்தேன். அவங்க கைது செய்யவில்லை.
இன்ஸ்பெக்டரிடம் பேசிட்டுதான் இருந்தேன். கைது செய்தால்தான் இங்கிருந்து போவேன். கடுமையான பிரிவுகளில் வழக்கு போடணும். அவர்களை கைது செய்து உள்ளே வைக்க வேண்டும். இன்னும் எப்ஐஆர் போடல. நான் விட மாட்டேன். கைது பண்ண பிறகுதான் பிரசாரத்திற்கு கிளம்புவேன். அந்த பையனுக்கு 16 தையல் போட்டு இருக்காங்க. தேர்தல் நேரத்தில் இப்படி ரவுடியிசம் பண்ணா, நான் சும்மா இருப்பேனா? இவ்வாறு அவர் கூறினார். மன்சூர்அலிகான் தர்ணா போராட்டதால் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத், முபராக் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.