புவனேஷ்வர்: ஒடிசாவில் பாஜ தனித்துப் போட்டியிடும் என்று முன்பு கூறியதை ஒடிசா பாஜ தலைவர் திரும்ப பெற்றார். ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 21 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019 சட்டப்பேரவை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் 112 தொகுதிகளையும், பாஜ 23 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றின.
மக்களவை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் 12 இடங்களிலும், பாஜ 8 இடங்களிலும், காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. நடைபெற உள்ள பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிஜூ ஜனதா தளம் இணைய உள்ளதாக செய்திகள் வௌியாகின. இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, ஒடிசா பாஜ தலைவர் உள்ளிட்டோருடன் பிஜூ ஜனதா தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் தொகுதி பங்கீட்டில் இருகட்சிகளிடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒடிசா பாஜ தலைவர் மன்மோகன் சமல், “ஒடிசாவில் இரு தேர்தல்களிலும் பாஜ தனித்துப் போட்டியிடும். மக்களின் ஆசியுடனும், ஒத்துழைப்புடனும் ஒடிசாவில் பாஜ தனித்து ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்.
இதை தன் ட்விட்டரிலும் சமல் பதிவிட்டிருந்தார். ஆனால் இதை கூறி இரண்டு மணி நேரத்தில் மன்மோகன் சமல் அதை மறுத்துள்ளார். “ஒடிசாவில் பாஜ தனித்துப் போட்டியிடுவது குறித்து கட்சியின் தேசிய தலைவரோ அல்லது கட்சியின் நாடாளுமன்ற குழுவோ எடுக்கும் முடிவே இறுதியானது” என்று மன்மோகன் சமல் கூறினார்.