* தேர்தல் ஆணையத்துக்கு தமிழக காங்கிரஸ் சவால்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சென்னை சத்தியமூர்த்திபவனில் அளித்த பேட்டி: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையம் இப்போது என்ன சொல்கிறது என்றால், நாங்கள் 15ம் தேதிக்குள் இதை வலைதளத்தில் ஏற்றுவது சிரமம் என்று கூறியிருக்கிறது. இது இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மீதான நம்பகத்தன்மையின்மையை காட்டுகிறது.
140 கோடி மக்களுக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய தேர்தல் ஆணையம் 44 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தகவல்களை வலைதளத்தில் 2 நாட்களில் பதிவேற்றம் செய்ய முடியாது என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. இப்போது மோடிக்கும், ஒன்றிய பாஜ அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் காங்கிரஸ் கட்சி ஒரு சவால் விடுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிடம் அந்த தகவல்களை கொடுங்கள், 2 மணி நேரத்தில் நாங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து கொடுக்கிறோம். எங்களிடம் உள்ள கருவி, கம்ப்யூட்டர், டெக்னாலஜி என எல்லோரும் சேர்ந்து 2 மணி நேரத்தில் இதை செய்து கொடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.