சென்னை : பாஜகவை வெட்டி துண்டாக்கி கடலில் மூழ்கடித்துவிட்டோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையனும் பாஜக ஒரு சைத்தான் என திண்டுக்கல் சீனிவாசனும் விமர்சித்துள்ளனர். அதிமுகவின் 52ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பொன்னையன், எந்த ஒரு காலத்திலும் அதிமுகவிற்கும் தமிழ்நாட்டிற்கும் எதிரான பாஜகவிற்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை எனத் தெரிவித்தார். திண்டுக்கல் பேகம்பூரில் நடந்த கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், பாஜக என்ற சைத்தான் கூட்டணியில் இருந்து வெளியே வந்ததில் எடப்பாடி பழனிசாமி 1000 மடங்கு மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அதிமுகவினர் 100 மடங்கு மகிழ்ச்சியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
பாஜக மட்டுமின்றி சிறுபான்மையினருக்கு எதிராக உள்ள எந்த கட்சியுடனும் இனி அதிமுக கூட்டணி வைக்காது என திண்டுக்கல் சீனிவாசன், திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “எப்போது இந்த கூட்டணியில் இருந்து விலகுவோம் என எதிர்பார்த்துக் கொண்டே இருந்தோம்..பாஜகவால் அதிமுக வளரவில்லை, அதிமுகவால் தான் பாஜக வளருகின்றது. நாங்கள் இனிமேல் செத்தாலும் பாஜக கூடவோ அல்லது சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளவர்கள் யாருடனும் சேர மாட்டோம் என தெரிவித்துள்ளார்.