காரைக்கால்: மக்களவை தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை பெற, உதயநிதியின் சனாதன பேச்சை எதிர்க்கும் பாஜவின் செயல்பாடு எடுபடாது என்று புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். காரைக்காலில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது சாத்தியமானது அல்ல. இது ஜனநாயக நாட்டிற்கு ஒத்துவராது. 5 மாநில தேர்தல் தோல்வி பயத்தால், அந்த தேர்தல்களை ஒத்தி வைக்கும் வகையில் மோடி ஒரே நாடு, ஒரே தேர்தல் கருத்தை முன் வைத்து பேசுகிறார்.
இந்தியா கூட்டணி அமைந்த பிறகு, இந்தியா என்று சொல்வதற்கு பிரதமர் மோடிக்கு அச்சம் வந்துவிட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து தமது கட்சியின் நிலைப்பாட்டை பேசியுள்ளார். அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் சனாதனத்தை எதிர்த்து பேசியபோது எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தவர்கள், தற்போது உதயநிதி பேசியதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காரணம் வரும் மக்களவை தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற திட்டத்தில் பாஜ செயல்படுகிறது. பாஜவின் இந்த செயல்பாடு எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.
*பாருக்கு ரூ.20 லட்சம் வாங்குகிறார் முதல்வர் ரங்கசாமி
நாராயணசாமி கூறுகையில், ‘புதுவை மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஊழல் மலிந்து விட்டது. பொதுப்பணித்துறையில் வெளிப்படையாக 25 சதவீதம் கமிஷன் கேட்கப்படுகிறது. முதல்வர் ரங்கசாமி அலுவலகத்தில் 5 புரோக்கர்கள் செயல்படுகின்றனர். ரெஸ்ட்ரோ பாருக்கு ரூ.20 லட்சம் வாங்குகிறார் முதல்வர். உண்மை இல்லை என்றால் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும். கலைஞர் பெயர் என்ற காரணத்தால் காலை உணவு திட்டத்தை முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எதிர்த்தார். இப்போது தமிழ்நாட்டை போல புதுச்சேரி அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை கொண்டு வர வேண்டும்’ என்றார்.