Saturday, July 27, 2024
Home » பாஜவின் தலையாட்டி பொம்மையாக இருந்துவிட்டு நாடக எதிர்ப்பா..? மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு என்ன சொல்லி ஓட்டு கேட்பீங்க…

பாஜவின் தலையாட்டி பொம்மையாக இருந்துவிட்டு நாடக எதிர்ப்பா..? மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு என்ன சொல்லி ஓட்டு கேட்பீங்க…

by MuthuKumar

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்கியது அதிமுக. அப்போது ‘குஜராத் மோடியா… இல்ல இந்த தமிழ்நாட்டு லேடியா’ என்று முழங்கி ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர், 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பல அணிகளாக உடைந்து பாஜவின் தலையாட்டி பொம்மைகளாக மாறி அதிமுகவையே அடமானம் வைத்தவர் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ். நான்கரை வருட ஆட்சி அதிகாரத்தையும், பதவி சுகத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசுக்கு கூஜா தூக்கியது அப்போதைய அதிமுக அரசு. இதனால் மக்கள் விரோத சட்டங்களான சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர், 3 வேளாண்மை திருத்தச்சட்டம், உதய்மின் திட்டம், உணவு பாதுகாப்பு திருத்தச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு மமோதாக்களுக்கு ஆதரவு கொடுத்து தமிழக மக்களின் வயிற்றில் அடித்தனர். வரலாற்றிலேயே முதல் முறையாக தலைமை செயலகத்தில் உள்ள தலைமை செயலாளர் அறையில் வருமான வரித்துறை சோதனை நடந்த பெருமை அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ்சையே சாரும்.

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் அதிமுக அமைச்சர்களின் மீதான ஊழல் முறைகேடு வழக்கு ஆகியவற்றை காரணம் காட்டி தங்களது விருப்பத்திற்கு ஏற்ப எடப்பாடி தலைமையிலானா அதிமுகவையும், தமிழ்நாடு அரசையும் ஆட்டி படைத்தது மோடி அரசு. ஜெயலலிதாவிற்கு காட்டிய அடிமை விசுவாசத்தை அப்படியே பாரபட்சம் காட்டாமல் மோடிக்கும் வழங்கினர் அதிமுகவினர். இதில் ஒருபடி மேலே போய் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ‘மோடிதான் எங்களுக்கு டாடி’ என்று கூறினார். இதையடுத்து 2019 நடாளுமன்ற தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைத்த அதிமுகவுக்கு மக்கள் கொடுத்த பரிசு படுதோல்வி.

இந்தநிலையில் பாஜ தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் அந்த கூட்டணிக்கிடையே முட்டல் மோதல் ஏற்பட தொடங்கியது. அதிமுகவை அவர் குற்றம்சாட்டி வந்தநிலையில் ஒருகட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களையும் வசைபாடினார் அண்ணாமலை. இதனால் ரோஷம் வந்ததுபோல் கூட்டணியை முறிக்கொண்டு வெளியே வந்தது அதிமுக. அண்ணாமலையின் வார்த்தை அட்டாக்கிலிருந்து தப்பிக்க கூட்டணியை விட்டு வெளியே வந்த அதிமுக, தற்போது தமிழகத்தின் நலனுக்காவும் சிறுபான்மையினரின் உரிமையை மீட்டெடுக்கவும் பாஜ உடனான உறவை முறித்ததாக அந்த கட்சியினர் கூறி வருகின்றனர். இவ்வாறு கூறினாலும் இதுவரை பாஜவை தீவிரமாக எதிர்க்காமல் பதுங்கி வருகிறார் எடப்பாடி. இதை அதிமுக-பாஜ கள்ளக்கூட்டணி வைத்து உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தற்போது தமிழகத்தில் தனித்து விடப்பட்ட அதிமுக, தேமுதிக, புதியதமிழகம், எஸ்டிபிஐ போன்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மக்களவை தேர்தலை பொறுத்தவரை இந்தியா கூட்டணி மற்றும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே தேசிய அளவில் உள்ளன. ஆனால் அதிமுக இந்த 2 கூட்டணியிலும் இல்லை. தமிழகத்தில் 33 தொகுகளில் போட்டியிடும் அதிமுக ஒன்றியத்தில் யாரை ஆதரிப்பார்கள், பிரதமர் வேட்பாளர் யார் என்ற முடிவு தெரியாமல் தேர்தலை சந்திப்பது காமெடியின் உச்சம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

16 − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi