கொலம்பஸ்: வானில் பறந்த பறவை மோதியதால் அமெரிக்க விமானம் தீப்பிடித்து எரிந்தது. உடனடி நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அமெரிக்காவின் பிரபல விமான நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், கொலம்பஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 7.45 மணியளவில் புறப்பட்டு பீனிக்ஸ் நகரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுவானில் திடீரென தீ பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டதால், உடனடியாக அந்த விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. ‘போயிங் 737’ வகையை சேர்ந்த இந்த விமானம், கொலம்பஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அங்கு வந்த தீயணைப்புப் படையினர் விமானத்தில் எரிந்து கொண்டிருந்த தீயைக் கட்டுப்படுத்தினர்.
இதுதொடர்பான புகைப்படங்களை விமான நிறுவனம் ெவளியிட்டுள்ளது. இருப்பினும், விமானத்தில் எத்தனை பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர் என்பது குறித்த விபரங்கள் ெதரிவிக்கப்படவில்லை. இந்த விமானத்தை தொடர்ந்து இயக்காததால், மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘போயிங்-737 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், வானில் பறந்து கொண்டிருந்த பறவை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் விமானத்தின் இன்ஜின் பகுதியில் தீப்பிடித்தது. இந்த சம்பவம் கேமராவில் பதிவானதால், உடனடியாக கொலம்பஸ் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. உடனடி நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது’ என்றனர்.