பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வீரபாண்டி பழைய ரயில் நிலையம் அருகே வசிப்பவர்கள் லோகநாதன்- புவனேஸ்வரி தம்பதி. லோகநாதன் டிரைவர். இவர்களுக்கு பிளஸ் 1 படிக்கும் அபிநயா (17), 9ம் வகுப்பு படிக்கும் ஹேமவர்ஷினி (14) என 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், மாணவிகளின் தாத்தா ராமசாமி (75) நேற்று மாலை தனது பைக்கில் 2 பேத்திகளையும் பள்ளியில் இருந்து அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற அரசு பஸ், ராமசாமி பைக் மீது மோதியது.
இதில், 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமியும், ஹேமவர்ஷினியும் பரிதாபமாக உயிரிழந்தனர். அபினயா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து ஏற்படுத்திய கண்ணப்ப நகரை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் வெள்ளைசாமியை (38) போலீசார் கைது செய்தனர். மாணவி ஹேமவர்ஷினி உயிரிழப்பை முன்னிட்டு அவர் படித்து வந்த தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.