Monday, May 20, 2024
Home » மடிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கஞ்சா சாக்லெட் விற்ற பீகார் வாலிபர் கைது: 4 கிலோ பறிமுதல்

மடிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கஞ்சா சாக்லெட் விற்ற பீகார் வாலிபர் கைது: 4 கிலோ பறிமுதல்

by Ranjith

ஆலந்தூர்: மடிப்பாக்கம் பேருந்து நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் சிபி.சக்ரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் ரத்தினக்குமார் தலைமையிலான போலீசார், அந்த பகுதியில் நேற்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மடிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே பையுடன் திரிந்த நபரை மடக்கிபிடித்து சோதனை செய்தபோது அதில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த நபரை காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில், பீகார் மாநிலம் பாலிகாட் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (28) என்பதும், இவர் பீகாரிலிருந்து ரயில் மூலமாக கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட் கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, மற்றும் 2 கிலோ கஞ்சா சாக்லெட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பினனர், அவரை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அண்ணாநகர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டபோது, ஒரு பெண் சந்தேகத்திற்கிடமாக பெரிய பார்சலுடன் அங்கு வந்தார். அவரை மடக்கி பிடித்து பார்சலை சோதனை செய்தபோது, கஞ்சா இருந்தது.
விசாரணையில் அவர், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தனலட்சுமி (53) என்பதும், தினமும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை ரயில் மூலம் கடத்தி வந்து, பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ் மூலம் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் இவர்மீது 13க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளதும், கடந்த 2009ம் ஆண்டு முதல் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இவரிடம் இருந்து 11 கிலோ கஞ்சா பார்சல் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

eight − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi