தென்காசி: ஓபிஎஸ் அணி சார்பில் தென்காசி இலஞ்சியில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை எனக்கூறி சூழ்ச்சி செய்தனர். எப்படி குறுக்கு வழியில் முதல்வர் ஆனாரோ அதேபோன்று குறுக்கு வழியில் தன்னை பொதுச்செயலாளராக ஆக்கிக்கொண்டார்.
அவரது முடிவு கட்சியை அதலபாதாளத்தில் தள்ளிவிட்டது. தற்போது பாஜ கூட்டணியில் இருந்தும் வெளியேறி தன்னந்தனியாக நிற்கிறார். அவரது பண பலம் கட்சி நிர்வாகிகளிடம் மட்டும்தான் எடுபடும். துரோகம் செய்தவர்களை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது என்றார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், தற்போது நாங்கள் பாஜ கூட்டணியில் இருக்கிறோம். எடப்பாடி தான் அவசரப்பட்டு வெளியேறிவிட்டார். மோடி மூன்றாவது முறையும் பிரதமராக வருவார். தமிழகத்தில் இதுவரை எந்த கட்சியுடனும் பாஜ தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றார்.