இவற்றுள் நல்ல வேளை, நாய் வேளை என இருவகை உண்டு. நல்லவேளைக் கீரையைச் சமைத்து உண்ணப் பயன்படுத்துகின்றனர். வெண்மை நிறப் பூக்களை உடையது நல்ல வேளை, மஞ்சள் நிறப் பூக்களை உடையது
நாய் வேளை.
நல்லவேளை
புளிக்குழம்பு வைத்து உண்ணுகின்றனர். வேளைக்கீரைப் புளிக்குழம்பு சுவையுடையதாக இருக்கும். சூடு என்று கருதுகின்றனர். இலை ஒரு பிடி, சுக்கு ஒரு துண்டு, மிளகு 6, சீரகம் ஒரு சிட்டிகை இடித்து அரை லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 3 வேளை 50 மி.லி. குடித்துவர வாதச் சுரம் தீரும். இலைச்சாறு ஒரு துளி காதில் விட்டுவர சீழ் வருதல் நிற்கும். இலையை அரைத்துப் பற்றுப்போடச் சீழ் பிடித்த கட்டிகள் உடைந்து ஆறும்.
நாய் வேளை
நாய் வேளையை மக்கள் சமைத்து உண்பதில்லை. ஆனால் அதன் விதையைத் துவையல் அரைத்து உண்பர். வாயுவைக் குணப்படுத்தும் என்கின்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. ஆனால் நாய் வேளைக் கீரையைப் பிற கீரைகளுடன் சமைத்து உண்ணலாம் என்கிறது மூலிகை மருத்துவம். இலை கட்டிகளை உடைக்கும் மருந்தாக பயன்படுகிறது. நாய் வேளைக் கீரையைப் பிற கீரைகளுடன் சமைத்துச் சாப்பிட வயிற்று வாயு அகலும், பசி மிகும், மாதர் உதிரச் சிக்கலை ஒழுங்குபடுத்தும். விதையைத் துவையல் செய்து சாப்பிட வாதம், பசியின்மை, உதிரச் சிக்கல் தீரும் .
வெந்தயக் கீரை
வெந்தயத்தை முளைக்கச் செய்து கீரையாக உண்ணும் வழக்கம் ஒரு சிலரிடம் காணப்படுகிறது. சந்தைகளில் விற்பதுமுண்டு. குழம்பாகவும் கூட்டுச் செய்தும் உண்ணுகின்றனர். குளிர்ச்சியுடையது. மூல நோய் உடையவர்கள் இக்கீரையை உண்பது நலம் பயக்கும் என்று கருதுகின்றனர்.
துத்திக் கீரை
இதய வடிவ இலைகளையும், மஞ்சள் நிற சிறு பூக்களையும், தோடு வடிவக் காய்களையும் உடைய செடி. இலையில் மென்மையான சுணை உண்டு. உடலில் பட்டால் சற்று அரிக்கும். இது சமைத்து உண்ணக்கூடிய கீரை என்பதே பலருக்கும் தெரியவில்லை. இதன் மருத்துவப் பயன் தெரிந்த ஒரு சிலரே இக்கீரையைச் சமைத்து உண்ணுகின்றனர். இசுலாமியர்கள் இலை மற்றும் பூவை இடித்து ஒருவித இனிப்பு செய்து உண்ணுகின்றனர்.நோய் நீக்கி உடல் தேற்றியாகவும், பூ குருதிப் போக்கு அடக்கியாகவும் காமம் பெருக்கியாகவும் செயற்படும். இலையைக் காரமின்றிப் பொரியலாய்ச் செய்து சோற்றுடன் பிசைந்து 40 முதல் 120 நாள் வரை சாப்பிட மூலநோய் முற்றிலும் நீங்கும். இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, இளஞ்சூட்டில் கட்டிவர, இரத்த மூலம், சீழ் மூலம் ஆகியவை தீரும்.
திருவாட்சி
இதன் இலையையும் துவையல் அரைத்து உண்ணும் பழக்கம் காணப்படுகிறது. மேற்கண்ட கீரைகளில் ஒரு சில கீரைகளை மட்டுமே அனைவரும் உண்ணுகின்றனர். அருகிக் காணப்படும் கீரை வகைகளைத் தேடிச் சேகரித்து கலப்புக் கீரையாகத் துவட்டி உண்பது ஏழ்மை நிலையில் உள்ள மக்களிடம் காணப்படும் வழக்கமாகும். கீரைகளைப் பற்றி இருவிதமான கருத்து மக்களிடம் நிலவுகிறது. கீரைகளின் பயன்களைத் தெரிந்தவர்கள் உடலுக்கு நன்மை பயக்கும், சத்து நிறைந்தது என விரும்பி உண்ணுகின்றனர். வேறு சிலர் கீரைகளை விடவும் கறி, மீன் போன்ற இறைச்சி வகைகளே சத்து நிறைந்தவை. எனவே கறி, மீன் உண்டால்தான் உடல் உறுதி பெற்று நீண்ட ஆயுள் பெறலாம் எனக் கருதுகின்றனர். எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் கீரை சத்துக் குறைந்தது. அதிக விலை கொடுத்து வாங்கும் இறைச்சி வகைகளே சத்துமிக்கது என்ற கருத்தே பெரும்பாலான மக்களிடம் உள்ளது.இது தவறான கருத்தாகும். வயிற்றில் மலச்சிக்கல் ஏற்படாமலிருக்கக் கீரை உணவு சிறந்ததாகும். கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளன. எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து முதலிய உப்புச் சத்துக்களும், ஏ.பி.சி. என்னும் உயிர்ச் சத்துக்களும் கீரைகளில் உண்டு. இந்தச் சத்துக்கள் எல்லாம் எல்லாக் கீரைகளிலும் உண்டென்று கருதக் கூடாது ஒவ்வொரு வகையான கீரையில் ஒவ்வொரு வகையான சத்துக்கள் உள்ளன. இரத்தத்தை நன்னிலையில் வைப்பதற்கு கீரைகள் மிகவும் உதவுகின்றன.ஆகவே கீரைகளை ஒவ்வொருவரும் அடிக்கடி உண்ணவேண்டும். கீரைகள் உப்புச் சத்துக்களையும், உயிர்ச் சத்துக்களையும் இலைகளின் வழியாகச் சூரிய ஒளியிலிருந்தும், வேர்களின் வழியே மண்ணிலிருந்தும் எடுத்துக் கொள்கின்றன. இலை தழைகளை மட்டும் தின்று உயிர் வாழ்கின்ற ஆடு,மாடு போன்ற உயிரினங்கள் எல்லாம் உடல் நலம் பெற்று இனிது வாழ்கின்றன’ என்று கீரைகளின் மகத்துவத்தை மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிடுகின்றார்.
– இரத்தின புகழேந்தி