சென்னை: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஒய்ட் பீல்டு பகுதியில் ராமேஸ்வரம் கபேவில் நேற்று முன்தினம் பிற்பகல் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பெங்களூரு போலீசார் மற்றும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்திலும் போலீசார் உஷார் நிலையில் இருக்க உளவுத்துறை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம் சந்தேகப்பட்டியலில் உள்ள நபர்களின் நடமாட்டங்களை கண்டறிந்து தமிழக போலீசார் அவர்களை கண்காணித்து வருகின்றனர். மேலும், மாவட்ட, மாநில எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பை போலீசார் பலப்படுத்தியுள்ளனர். அந்தவகையில் நேற்று முன்தினம் முதல் சென்னையில் முக்கியமான இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு, அங்கு தங்கியிருப்பவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளிமாநில நபர்கள் யாரும் சந்தேக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா என கண்காணித்து எச்சரிக்கையோடு செயல்பட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,