பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படும் துணி வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி மதியம் ஒரு மணியளவில் 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். சிசிடிவி காட்சி அடிப்படையில் குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டு துப்பு கொடுப்பவருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ அறிவித்தது.
இந்நிலையில், பல்லாரியை சேர்ந்த துணி வியாபாரி ஒருவருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. அவரை நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் தீவிரமாக இயங்கிவருவதாக சந்தேகிக்கப்படுகிறது. மினாஜ் என்றழைக்கப்படும் முகமது சுலைமான் என்ற 26 வயது நபர் துணி வியாபாரி ஆவார். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பில் மிகத்தீவிரமாக செயல்பட்டுவந்தவர். சுலைமானுடன், ஷயான் ரஹ்மான் என்ற ஹுசைன், இக்பால் ஷேக் (23), சையத் சமீர் (19) ஆகிய நால்வரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.