நாகர்கோவில்: குமரி மாவட்டம் கணபதிபுரம் பேரூராட்சி அதிமுக பெண் கவுன்சிலரை ஆபாசமாக பேசி அமமுக நிர்வாகி ஒருவர் மிரட்டும் ஆடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது. நாகர்கோவில் அருகே உள்ள கணபதிபுரம் பேரூராட்சி 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பூமதி. இவர் முன்னாள் பேரூராட்சி தலைவி ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவரை அமமுக நிர்வாகி ஒருவர் செல்போனில் பேசி மிரட்டும் ஆடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இந்த நிர்வாகி, பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை எடுத்து செய்யும் காண்ட்ராக்டர் என்றும் கூறப்படுகிறது.
பேரூராட்சி கவுன்சிலர் பூமதிக்கு போன் செய்யும் நிர்வாகி, என்னை பற்றி ஏன்? பேரூராட்சி கூட்டத்தில் பேசினீர்கள் என கேட்கிறார். அப்போது பூமதி, நான் யார் குறித்தும் பேச வில்லை. நீங்கள் பேரூராட்சி காண்ட்ராக்டர் என்றால் எனக்கு கவலை இல்லை. நான் எனது வார்டில் மோட்டாரை தூக்கி சென்று இன்னும் பொருத்தாமல் இருப்பது குறித்து தான் கூறினேன் என்றார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்த நிர்வாகி, நான் யார் என தெரியாமல் விளையாடுகிறாய். உன் தாலியை அறுத்தேனா? என கூறி, பூமதியை ஆபாசமாக திட்டி மிரட்டுகிறார். இதுகுறித்த ஆடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் நேற்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்ட நிலையில் பெண் கவுன்சிலர் ஒருவரை, அமமுக நிர்வாகி ஒருவர் ஆபாசமாக பேசி மிரட்டி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.