கான்பூர்: குளியலறையில் ரகசிய கேமரா வைத்து குளிப்பதை வீடியோ எடுத்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அடுத்த பகாரா கிராமத்தைச் சேர்ந்தவர் பிளஸ் 2 மாணவி, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு லக்சாம்பூரில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி படித்து வந்தார். என்சிசியில் சேர்ந்துள்ள அந்த மாணவி, காலையில் ஓட்டப்பயிற்சி எடுத்து வந்தார்.
கடந்த ஆக. 21ம் தேதி ஓட்டப் பயிற்சிக்குச் சென்றவர் மாணவி, அதன் பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போது, ராமகங்கா கால்வாயில் மாணவி விழுந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து படகில் மாணவியைத் தேடும் பணி நடைபெற்றது. பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது. மாணவி கால்வாயில் தவறி விழுந்ததாக கிராம மக்கள் கூறி வந்த நிலையில், மாணவியின் தந்தை, பித்னு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில், தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிவம் என்பவரால் தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக புகார் கூறினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது, மாணவியின் தாய் வழி தாத்தா வீட்டின் கூரையில் ரகசிய கேமிரா வைத்து, மாணவி குளிப்பதை சிவம் வீடியோ எடுத்தது உண்மை எனத் தெரிய வந்தது. இவ்விவகாரம் வெளியே தெரிந்ததால், அவமானம் தாங்காமல் மாணவி கால்வாயில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் மாணவிக்கு சிவம் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக சிவத்தின் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் சிவத்தை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.