சென்னை : தமிழ்நாட்டின் உரிமையை காக்க 40க்கு 40 வெற்றியை தர வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து திருச்செந்தூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி,”தூத்துக்குடி வேட்பாளரை 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். இந்தியா கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த அதிமுக ஆட்சியில் மாநில உரிமைகள் ஒன்றிய அரசிடம் அடகு வைக்கப்பட்டது. நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதித்தது அடிமை அதிமுக அரசு. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைப்பதாக பாஜக நாடகமாடுகிறது.
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடு காட்டும் பிரதமர் மோடியை 29 காசு என்று அழையுங்கள். ஏழைகளின் வங்கிக்கணக்குகளில் இருந்து ரூ.21,000 கோடியை சுருட்டியுள்ளது பாஜக அரசு.தமிழ்நாட்டு நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என உறுதி அளிக்கிறோம். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக மாற்றப்படும் ஊதியம் ரூ.400-ஆக உயர்த்தப்படும். திராவிட மாடல் அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணாக்கர்கள் பயன். தேர்தல் முடிந்தபின், மேலும் பலருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட பிரதமர் வரவில்லை. புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசே நிவாரணநிதி வழங்கியது,”இவ்வாறு தெரிவித்தார்.