சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வந்தது. இதற்கிடையே கடந்த மூன்று நாட்களாக தாளவாடி மலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை தாளவாடி மலைப்பகுதியில் உள்ள எரஹனஹள்ளி, பனகள்ளி உள்ளிட்ட கிராமங்களில் திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
சூறைக்காற்று வீசியதால் பனஹள்ளி கிராமத்தில் உள்ள ஆசிப் என்பவரது விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள இரண்டாயிரம் வாழைகள் காற்றின் வேகம் தாங்காமல் முறிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதனால், விவசாயி ஆசிப்புக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, தாளவாடி மலைப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் மலை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.