விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி:கர்நாடகாவில் பாஜ மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை தேர்தலாக அமைந்துள்ளது. கர்நாடகாவில் மோடி, அமித்ஷா ஆகியோர் வீதி, வீதியாக சென்று ஓட்டு கேட்டும் கூட பாஜ மிகப் பெரிய தோல்வி அடைந்துள்ளது. இது கர்நாடகாவில் பாஜவுக்கு ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல, அகில இந்திய பாஜவிற்கும், மோடி, அமித்ஷா கூட்டணிக்கும் ஏற்பட்டிருக்கிற மரண அடி என்பது தான் உண்மை.
இமாச்சல பிரதேசம், டெல்லி கார்ப்பரேஷன் தேர்தல், சிம்லா மேயர் தேர்தல், தற்போது கர்நாடகா தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர் தோல்விகளை பாஜ சந்தித்து வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜ படுதோல்வி அடைவதற்கு இந்த தேர்தல்கள் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.
குழந்தை திருமணம் செய்த புகாரில் தீட்சிதர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அது தவறு என ஆளுநர் கூறுகிறார். இப்படி ஒரு ஆளுநரை இந்தியாவில் நாம் பார்த்தே இருக்க முடியாது. எனவே இப்படிப்பட்ட ஆளுநரை பதவி நீக்க வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.